முதல்முறையாக அமைச்சரானார் நடிகை ரோஜா... ஆந்திராவில் 25 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!!

திருமலை: ஆந்திரா, அமராவத்தியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்றபோது, தனது அமைச்சரவையில்  இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு  புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் இருந்த 24 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். ஏற்கனவே ஒரு அமைச்சர் இறந்துவிட்டதால், 25 அமைச்சர் பதவிகள் காலியானது.

இந்நிலையில், பழைய அமைச்சர்கள் 10 பேருக்கு தொடர்ந்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை ரோஜா உட்பட புதியவர்கள் 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றார். ரோஜா தவிர குடிவாடா அமர்நாத், புடி முட்யாலா நாயுடு, தாடிசெட்டி ராஜா, ராஜண்ணா டோரா பீடிகா, தர்மான பிரசாத் ராவ், ஜோகி ரமேஷ், அம்பத்தி ராம்பாபு, மெருகு நாகார்ஜுனா, விடடாலா ரஜினி, கொட்டு சத்யநாராயணா, குருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ், காகனி கோவர்த்தன ரெட்டி மற்றும் உஷா ஸ்ரீ சரண் ஆகிய 13 பேர் அமைச்சர்களாகினர்.

Related Stories: