மாந்தோப்பில் தூங்கியபோது யானைகள் மிதித்து விவசாயி பரிதாப பலி

திருமலை :  சித்தூர் அருகே மாந்தோப்பில் தூங்கிய போது, யானை மிதித்ததில் விவசாயி பரிதாபமாக பலியானார். சித்தூர் மாவட்டம், சதும் மண்டலம் ஜோகிவாரிபள்ளி வனப்பகுதியில் வியாழக்கிழமை காலை யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், ஜோகிவாரிபள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா(38), விவசாயி. இவர் தனது மாந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  யானைகள் மாந்தோட்டத்தை மிதித்து துவம்சம் செய்தன.  மேலும், தூங்கி கொண்டிருந்த எல்லப்பாவையும் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்து கொண்டு இருந்தார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் யானைகளை விரட்டியடித்து எல்லப்பாவை திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: