தனியார் மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை: டாக்டர்கள், நர்சுகளை தாக்கினால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை:  டாக்டர்கள், நர்சுகளை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம் உயிரை துச்சம் என மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர். அரசு துறையிலும், தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றிவரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள்நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையையும், பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கியுள்ளது. இந்நிலையில் சில நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. மருத்துவமனைகளில் உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க இயலாததாகிறது. இந்த சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறியவாறு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் பெரும் சேவை செய்துவரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகள் இந்த பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்திக்கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதேநேரத்தில், பொதுமக்களிடம் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது. தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தனியார் மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை: டாக்டர்கள், நர்சுகளை தாக்கினால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: