டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். ஆளுநர் குர்மீத் சிங் புஷ்கர் சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. ஆனால், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது. கடந்த திங்கட்கிழமை பாஜ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் மீண்டும் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து டேராடூனில் நேற்று நடந்த விழாவில் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். ஆளுநர் குர்மீத் சிங் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர் பதவியேற்றுள்ள சவுரப் பகுகுணா, முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா மகன் ஆவார். அதே போல் கடந்த முறை சபாநாயகராக இருந்த பிரேம் சந்த் அகர்வாலுக்கு தற்போது அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.