சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எடுத்து வருகிறார். மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் படி வாகனங்களில் அரசு அனுமதி அளித்துள்ளபடி பதிவு எண்கள் மற்றும் பதிவு எண் தகடுகள் இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் பைக் உட்பட பல்வேறு வாகனங்களில் அரசு அறிவித்துள்ளப்படி பதிவு எண்கள் மற்றும் பதிவு தகடுகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போதும், விபத்துகள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் அரசு உத்தரவுப்படி வாகன பதிவு எண்கள் மற்றும் வாகன பதிவு எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் 73 இடங்களில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக வாகன பதிவு எண்கள் மற்றும் வாகன பதிவு தகடுகளுடன் சுற்றி வந்த 2,306 வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 826 வாகனங்களை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
