டேராடூன்: ‘இந்தியாவை நவீனமயமாக்கும் மற்றும் தன்னிறைவு நாடாக மாற்றும் இலக்கை மறந்து விடாதீர்கள்,’ என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். இங்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழலில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்றுநோக்கி வருகின்றது. புதிய உலகுக்கான செயல்முறை உருவாகி வருகின்றது. இந்த புதிய செயல்முறைப்படி இந்தியா தன்னைத்தானே விரைவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின் வரும் புதிய உலக செயல்முறையில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்க வேண்டும். தற்போதுள்ள பயிற்சி அதிகாரிகள் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பல முறை நான் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். ஆனால், நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்.