சென்னை: திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் பங்கேற்று, அனைத்து நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சிப்காட்டில் ₹1000 கோடி மதிப்பில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, தென்மாவட்ட இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு கிடைக்க செய்த முதல்வருக்கு சமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம். வரும் ஜூலை 15ல் சமக சார்பில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முதல்வரை அழைப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.