தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் சிந்தாமல்,சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்: இரண்டாவது நாள் கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதன் முறையாக மாவட்ட கலெக்டர், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய சட்டம்-ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

மாவட்டங்களில் பிரச்னை ஏற்படும்போது, மாவட்ட எஸ்பிக்கள் கள நிலவரத்துக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்வர் வலியுறுத்தினார். முதல்நாள் மாநாட்டின் முடிவில், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். இதைத்தொடர்ந்து, 2வது நாளாக நேற்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

2வது நாள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாவட்ட கலெக்டர்கள், தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் குறித்து, கள நிலவரத்தை விரிவாக நீங்கள் இங்கே எடுத்துரைக்கலாம். இந்த அரசினுடைய திட்டங்களின் பயன் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களில் அதை இணைத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும், உங்களுக்கும் அதாவது, எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களை போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே, ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தை பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக்களையெல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம். நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து கொண்டு, உங்களுடைய ஆலோசனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம். உங்களுடைய கருத்துக்களை கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது தங்கள் மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர். இந்த கூட்டம் நேற்று மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று 3வது நாளாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு, மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக, தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைத்தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட முதல்வர் திட்டமிட்டுள்ளார். இன்று மாலை 6.30 மணியுடன் சென்னையில் 3 நாளாக நடைபெற்ற கலெக்டர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு நிறைவு பெறும்.

Related Stories: