முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர்-சங்கேந்தி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(46). விவசாயியான இவர், சாகுபடி செய்த பயிருக்கு 2021-22ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியிருந்தார். ஆனால் இவருக்கு வரவேண்டிய காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. அதே பகுதியை சேர்ந்த 56 பேருக்கும் விடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர். விவசாய செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியின்றி தவித்த விவசாயி கலைச்செல்வன், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.