உள்நாட்டு உபகரணங்களுடன் அதிநவீன போர்க்கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது: இந்திய கடற்படை தளபதி பெருமிதம்

திருமலை:  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில், ‘‘மிலன் 2022’  சர்வதேச கடற்படை சாகச நிகழ்ச்சி நடந்தது.  இதற்கான சர்வதேச நகர கடற்படை வீரர்களின் அணிவகுப்பில் முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் பேசியதாவது: வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அந்தந்த நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அவசியம்.  நாட்டிலுள்ள மஸ்கண்டோக் கப்பல் கட்டும் தளத்தில் 75 சதவீத உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன போர்க்கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது.  அதற்கு ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் என்று பெயரிட்டோம்.

கடல்சார் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடல்சார் வளம் சீர்குலைந்திருப்பது கவலையளிக்கும் வளர்ச்சியாகும்.  சில நாடுகள் பெருங்கடல்களின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன.  கடல் சார்ந்த வளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றன.  இது சர்ச்சையையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.  சர்வதேச ஒப்பந்தங்களை சீனா மீறுவது கவலையளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்  போர்க்கப்பலை முதல்வர் ஜெகன்மோகன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது  அவர்    ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலையும், ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக்  கப்பலையும் பார்வையிட்டார்.

Related Stories: