உ.பி. தேர்தல்: லக்‍கிம்பூரில் பலத்த பாதுகாப்புடன் ராணுவம் புடை சூழ வாக்‍களித்தார் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா..!!

லக்னோ: லக்‍கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்‍கில், ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்‍கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்றுவரும் 4-ம் கட்ட தேர்தலில், அவர் பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்‍களித்தார். லக்‍கிம்பூரில் உள்ள பன்பிர்பூர் தொகுதியில், காவல்துறை மற்றும் ராணுவம் புடை சூழ அவர் வாக்‍களித்து சென்றார். உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரேபரேலி, லக்கிம்பூர் கெர்ரி, உன்னாவ், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குபதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முக்கிய தொகுதிகள் கொண்ட 4ம் கட்ட வாக்குபதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட லக்கிம்பூர், கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த உன்னாவ் மற்றும் காங்கிரசின் முக்கிய தொகுதியான ரேபரேலி உள்ளிட்டவை இன்று வாக்குப்பதிவை சந்திக்கும் முக்கிய இடங்களாக உள்ளன. பாஜகவிற்கு எதிரான அலை வீசும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லக்‍கிம்பூரில் பலத்த பாதுகாப்புடன் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களித்தார்.

Related Stories: