ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால், சடலத்துடன் ஆற்று வெள்ளத்தில் இறங்கி செல்லும் அவலம் தொடர்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோமலாபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பாலாற்றை ஒட்டி அமைந்துள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த சுடுகாட்டிற்கு முறையான பாதை இல்லாததால் சடலம் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, சடலத்துடன் நீரில் இறங்கி சுடுகாட்டிற்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, சோமலபாபுரம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.