கும்பகோணம், பவானி பகுதி பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் 2 பேர் திடீர் மரணம்

சென்னை: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சி, பவானி அடுத்த அம்மாபேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் திடீரென நேற்று மரணம் அடைந்தனர். அந்த வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக சார்பில் அனுஷியா(56) போட்டியிட்டார். அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளரான இவர், கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் திமுக நிர்வாகிகளுடன் 9வது வார்டில் உள்ள பெரியதைக்கால் தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அனுஷியா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்தனர்.அப்போது அவர், அனுஷியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட உள்ளது. பவானியில்: ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அம்மாபேட்டை, உமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்தவர் சித்துரெட்டி (62). இவர், அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதனால் அந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: