சென்னை: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சி, பவானி அடுத்த அம்மாபேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் திடீரென நேற்று மரணம் அடைந்தனர். அந்த வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக சார்பில் அனுஷியா(56) போட்டியிட்டார். அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளரான இவர், கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் திமுக நிர்வாகிகளுடன் 9வது வார்டில் உள்ள பெரியதைக்கால் தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அனுஷியா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்தனர்.அப்போது அவர், அனுஷியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.