வேப்பூர் அருகே பரபரப்பு 50 பவுன் நகை, பைக்கும் கேட்டு மாமியார் வீட்டை எரித்த மருமகன்

வேப்பூர்: வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி(79). கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், ஜோதி தனது இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசிக்கிறார். ஜோதியின் மூத்த மகள் வினோதச்செல்வியை(45) அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேல்(59) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் ஜெயவேல் தனது மாமியார் ஜோதியிடம் சென்று தனக்கு 50 பவுன் நகையும், பைக்கும் வாங்கித்தர வேண்டும் எனக்கூறி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே உனக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளேன். தற்போது என்னிடம் பணம், நகை இல்லை.

நானே வயதாகி தனிமையில் வசித்து வருகிறேன் எனக்கூறி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயவேல், ஜோதி வசித்து வந்த கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஜோதி அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு  வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து ஜெயவேலை கைது செய்தனர்.

Related Stories: