சென்னை: தன் கணவர் மீது தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யுடியூப்பில் மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற சேனல்களை நடத்தி அதன் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் பப்ஜி மதனுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா மனுதாக்கல் செய்திருந்தார்.