பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டி விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தன் கணவர் மீது தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யுடியூப்பில் மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற சேனல்களை நடத்தி அதன் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் பப்ஜி மதனுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள  நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி  கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: