சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட விசாரணைக்கு யாருக்கெல்லாம் சம்மன் அனுப்பலாம் என்பது தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், ஆணையம் அதை ஏற்காததன் காரணமாக உயர்நீதிமன்றம், அதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூழலில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.