சட்ட விரோதமாக தயாரித்த போது நாட்டு வெடி வெடித்ததில் வாலிபர் உடல் சிதறி பலி

உசிலம்பட்டி: வீட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்த போது, வெடிகள் வெடித்து சிதறியதில் ஒருவர் உடல் சிதறி பலியானார். மேலும் இளம்பெண், அவரது 6 மாத பெண் குழந்தை படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் (35). இவர் தனது வீட்டில் ஆட்களை வைத்து சட்ட விரோதமாக விசேஷ வீடுகளுக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகளை தயாரித்து வந்ததுள்ளார். இன்று காலை 11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த அஜித் (27) மட்டும் வீட்டில் நாட்டு வெடிகளை தயாரிக்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்துள்ளன. இதில் அஜித் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். குபுகுபுவென வீட்டுக்குள் இருந்து கரும்புகை வெளியானது.

பிரவீன் வீடும், அருகே உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீடும் இடிந்து தரைமட்டமானது. மேலும் பிரவீன் வீட்டின் கீழ் பகுதியில் குடியிருந்த இளம்பெண் நிவிதா (22) மற்றும் அவரது 6 மாத பெண் குழந்தை படுகாயமடைந்தனர். இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 100 மீட்டர் பகுதி வரை சிதறி கிடந்த அஜித்தின் உடல் பாகங்களை சேகரித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: