மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து அனைத்து வகையான பயிர்களையும் நாசம் செய்கின்றன. அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகளும் மலைகாய்கறிகள் பயிரிடுவதை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடியிருப்புகள் மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து மிகுந்த பஜார் பகுதிகளிலும் கால்நடைகளைபோல் காட்டுப் பன்றிகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இவற்றுடன் குட்டிகளும் ஏராளமாக வலம் வருவதால் அடிக்கடி வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதுடன் விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.