வேலூர்: காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைன் பழுது பார்ப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் ஒரு வார காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் பாலாற்றுப்படுகையில் புதைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன் சேதங்களை சீரமைக்கும் பணியில் இறங்கியது. இதில் மாதனூர் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு பைப் லைன் முழுமையாக ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு மட்டும் மாதக்கணக்கில் பணி நீடித்தது. இப்பணி சமீபத்தில் நிறைவடைந்து தற்போது செதுவாலை வரை பைப் லைன் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் குடியாத்தம் நகருக்கு அடுத்த 2 நாட்களில் காவிரி குடிநீர் வினியோகம் நடக்கும் என்று தெரிகிறது.