ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் தலா ஒரு பூசாரி நியமனம்

சென்னை: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் தலா ஒரு பூசாரி நியமனம் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், வருவாய் இல்லாத பெரும்பாலான கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை. இந்த நிலையில், கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் இக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை செய்திடும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தது. இதையேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில், 12959 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோயில்களில் பூஜை செய்திடும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோர் விவரங்கள் உதவி ஆணையர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இக்கோயில்களில் தற்போது பூஜை செய்திடும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர் அந்தெந்த கோயில்களின் ஆகம விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களின் படி  பூஜை செய்வதை உறுதி செய்து, ஒவ்வொரு கோயில்களுக்கு ஒரு நபர் மட்டுமே பதிவு செய்து உதவி ஆணையர் நிலையில் அனுமதி வழங்க வேண்டும்.

எனவே, அவர்களின் விவரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை உதவி ஆணையர்கள் பெற்று பதிவு செய்திட வேண்டும். மேற்கண்டவாறு, பதிவு செய்வது அனுமதி வழங்கும் பணியினை வரும் 28ம் தேதிக்குள் முடித்து அனுமதி நகல்களை இவ்வலுவலகத்திற்கு மார்ச் 7ம் தேதி அனுப்பி வைத்திட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட  கோயில்களில் பூஜை செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. உதவி ஆணையர் பெறும் பதிவில் பெயர் தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், புகைப்படம், தொலைப்பேசி எண் குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று  உள்ளிட்ட விவரங்களை பெற அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: