பிப்.8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நீட் சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டதுடன், விரைவில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் திடீரென புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டலத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட உள்ளது.

மக்கள் நலன் சார்ந்து மாணவர் நலனுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நல்லதே நடக்கும். கூட்டத்தொடருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கம் போல் கொரோனா பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர் எனவும் கூறினார்.

Related Stories: