திருப்பத்தூர் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவே சுற்றித்திரியும் கால்நடைகள்: கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

திருப்பத்தூர்: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. மாவட்ட தலைநகர் பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வாணியம்பாடி மெயின் ரோடு, சேலம் மெயின் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, திருவண்ணாமலை மெயின் ரோடு உள்ளிட்ட சாலைகள் உள்ளது.

இந்த சாலைகளில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களும் இந்த சாலைகளை நாள் தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாவட்ட தலைநகரமாக உள்ள திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை வீடுகளில் கட்டி வைக்காமல் அதனை சாலைகளில் சுற்றித் திரிய விட்டுவிடுகின்றனர். இந்தக் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சென்று மெயின் ரோடுகளில் இந்த இந்த கால்நடைகள் நடந்து வருகிறது.

மேலும் சாலைகளில் படுத்துக்கொண்டும் உள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திடீரென சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மீது கால்நடைகள் மோதி பொதுமக்களுக்கு கால் முறிவு உள்ளிட்ட படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் இந்த விபத்து என்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பஸ் நிலையம், வேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது.

இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்திலும், இந்த கால்நடைகள் பொதுமக்களையும் முட்டி மிரட்டுகிறது. பயணிகள் முதல் பொதுமக்கள் வரை இதனால் பயந்து கீழே விழுந்து படுகாயம் ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் வாகனங்கள் குறுக்கே நின்று கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதால் பொதுமக்களுக்கு இந்த கால்நடைகளால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

இந்த கால்நடைகளை பிடித்து நகராட்சியில் கட்டிவைக்கப்பட்டு உரிய அபராதத்தை கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களிடம் வசூலித்து கால்நடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட கலெக்டர் வாகனத்தை கூட வழிமறிக்கும் இந்த கால்நடைகளால் பொதுமக்கள், நேற்று கலெக்டரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: