புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும்: சமரச மையம் தேவையில்லை என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் கடந்த 2016 அதிமுக ஆட்சியில் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால்  ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஸ்.டி நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தங்கள் நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது,  93 சதவீத சரி செய்யும் பணிகள் முடிந்து விட்டதாக பி.எஸ்.டி. நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால் அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்க செய்து விடும் என கூறி, அந்நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில்  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், பிரச்னைகள் இருந்தால்  சமரச மையத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என்ற சரத்து உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும். சமரச மையம் விசாரிக்க தேவையில்லை என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: