தமிழக அரசின் முயற்சியால் ராமநாதபுரம் மீனவர்கள் விடுவிப்பு

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள், தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு, விமானம் மூலம் சென்னை வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர்கள் கிலாட்சன் (29), மரிய எமர்சன் (28), கிரின்ஸ் (32). மீனவர்கள். இவர்கள், கடந்த டிசம்பர் 9ம் தேதி மண்டபம் கடல் பகுதியில் நள்ளிரவில் இயந்திர படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகை சுற்றி வளைத்து கைது செய்தனர். படகு மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி அவர்களது குடும்பத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய அரசு, மத்திய வெளியுறவு துறை மூலமாக மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, கடந்த 5ம் தேதி 3 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 3 மீனவர்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அவர்களுக்கு பாஸ்பார்ட் இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள், அவசர சான்றிதழ் வழங்கினர். அதன்மூலம், 3 மீனவர்களும் இலங்கையில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் காலை 6.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கார் மூலம் ராமநாதபுரம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: