8 ஆண்டு பழமையான வாகனங்களை மாற்றும் அரசின் சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் 8  ஆண்டு பழமையான வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால் புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கில், போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் வாகனங்கள் தயாரிக்க படுகின்றன. ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு அதுகுறித்து கற்பிக்க வேண்டியுள்ளதால் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகள் முடியாத இலகுரக வாகனங்களும், 10 ஆண்டுகள் முடியாத கனரக வாகனங்களும் பயன்படுத்துவதற்கு தகுதியானவை.அரசின் உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளது. அப்போது கொரோனா இல்லை. தற்போதைய சூழலை சாதகமாக்கி மனு செய்தது ஏற்புடையது அல்ல என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி போக்குவரத்து ஆணையரின் பதில்மனுவை ஏற்று அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: