சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 53 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் தொற்று பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து மூன்றாவது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து நேற்று 28,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போன்று சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,46,798 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,13,534 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 30 லட்சத்து ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் நேற்று உயிரிழந்தனர்.இதையடுத்து மொத்தம் 37,412பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று 5,591 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 3,629, செங்கல்பட்டு 1,696, ஈரோடு 1,314, கன்னியாகுமரி 970, சேலம் 1,431, திருப்பூர் 1,877 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.