கடலூர் அருகே இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் 2013 ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக தன்னார்வலால் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இது தரமற்ற முறையில் இருப்பதாகவும், அதே சமயம் நகர்ப்புற பகுதியை விட்டு மிக தொலைவில் இருப்பதாகவும் அவர்கள் அப்போது செல்ல மறுத்துவிட்டனர். இதனால் அந்த கட்டடங்கள் அனைத்துமே பயன்பாடில்லாமல் புதர் மண்டி அப்படியே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தான் அப்பகுதிக்கு அருகில் உள்ள சிறுவர்கள் அவ்வப்போது அங்கு சென்று விளையாடச் செல்வதாக கூறப்படுகிறது. அதேபோல் தான் இன்றும் 3 சிறுவர்கள் அங்கு விளையாடச் சென்றபோது, அந்த பயன்பாடில்லாத கட்டடம் திடீரென்று இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

அதில் அங்கு விளையாடச் சென்ற 3 சிறுவர்களான, வீரசேகரன், சதீஷ்குமார், புவனேஷ்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தகவலறிந்து தீயணைப்புத்துறை, காவல்துறை, கிராமமக்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 சிறுவர்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக கொண்டுவந்தனர். சிகிக்சைக்காக சென்ற சிறுவர்களில், வீரசேகரன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அந்த கட்டடத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அந்த ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாகவும், சமூக விரோத செயல்களுக்கு அது கூடாரமாக அமைந்துவிடக்கூடாது என்று கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் அந்த கட்டடம் அங்கிருந்து அகற்றப்படாமல் இருந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்று அப்பகுதி கிராமமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் இதேபோல், அங்கிருக்கும் அனைத்து கட்டடங்களும் பயன்பாடில்லாமல் புதர்மண்டி கிடைப்பதால் பாழடைந்த கட்டடத்தை சரியாக அகற்றவேண்டும் என்று மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.     

Related Stories: