வன விலங்கு மரபணு ஆராய்ச்சி ஆய்வகம் விரைவில் செயல்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: வனவிலங்குகளின் மரபணு ஆராய்ச்சி தொடர்பான ஆய்வகம் அமைக்க தேவையான அனைத்து இயந்திரங்களும் கொள்முதல் செய்து விட்டதாகவும், விரைவில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. வன விலங்குகளின் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ய பிற மாநிலங்களை அணுக வேண்டியுள்ளதால், வனவியல் தடயவியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.அப்போது அவர்கள், ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் அரசு கொள்முதல் செய்துள்ளது. சோதனைகள் நடத்துவதற்கு தகுதியான அறிவியலாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளோம். கொரோனா பேரிடர் காரணமாக சற்று தாமதமாகியுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Related Stories: