இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அறிவித்துள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக்  கொள்கையை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது. கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை மாநில அரசு முடிவெடுக்கலாம். இருந்தபோதும் இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும். மக்கள் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும். மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது. கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இந்தி படிப்பதை யாரும்  தடுக்கவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என்று கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: