2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை: 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு செய்து நடத்தி நிரப்பி வருகிறது.  இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பர் 19ம் தேதி தொடங்கி கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தேர்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர். ஆன்லைனிலேயே கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

இறுதியாக ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிஎம்இ அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. வரும் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 28, 29ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறவுள்ளது. பின்னர், 30ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்திக் கொண்டு பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் முதல் முறையாக நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்படும். மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, அரசு மருத்துவ கல்லூரிகளில் 4,349  இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு 436 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.  அதைப்போன்று பிடிஎஸ் படிப்பில் உள்ள 1,930 இடங்கள் உள்ளன. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மொத்தம், 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: