குடியரசு தின விழா கொண்டாட்டம்!: சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிக்கட்ட ஒத்திகை..!!

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. 73வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி விமர்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா - காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கோடியை ஏற்றவுள்ளார். இதையடுத்து முப்படை, மாநில காவல்துறை, கடலோர காவல்துறையின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே கடந்த 20 மற்றும் 22ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

விழாவிற்கு ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முப்படையினர், துணை ராணுவம், கடலோர காவல்படை, தமிழக காவல்துறை, தீயணைப்புப்படை மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டனர். இசை வாத்தியங்கள் முழங்க அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்றன. அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசுதின ஒத்திகை பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

குடியரசு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருடன் ஒன்றிணைந்து மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லையில் ஒரு ரயில் நிலையத்திற்கு 50 பேர் வீதம் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Related Stories: