94.19% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி சென்னை பெருநகர மாநகராட்சி இந்தியாவிலேயே முன்னிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற  கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமையும், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து  தெரிந்து கொள்ளும் வகையில் ஆய்வகத்துடன் பரிசோதனை செய்யும் வகையில் சென்னை  ஐ.ஐ.டி உருவாக்கிய நடமாடும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோட்டி, சட்டமன்ற உறுப்பினர்  பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நேற்று  19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 3.32 கோடி  தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.  பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600  சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும்.  இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில்  94.19% பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள  பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது.  74.11 % பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 21  மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580  ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு  தடுப்பூசியின் விலை ₹1100 இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை  கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே  தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம், வாங்க வேண்டாம் என்பதை  சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.உள்  மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில்  தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது நேற்றுமுன்தினம் 7  ஆயிரமாக சற்று குறைந்துள்ளது என்றார்.

Related Stories: