சென்னை: சென்னை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆய்வகத்துடன் பரிசோதனை செய்யும் வகையில் சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய நடமாடும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோட்டி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நேற்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.