நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.671.15 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப்புரங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர்மயமான மாநிலமாகத் திகழ்கிறது. வேகமான நகர்மயமாக்கல் பெரும் பொருளாதாரத் தேவைகளையும், அதேசமயம் பெரும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புர பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். இதனைக் கருத்திற் கொண்டு தமிழ்நாடு அரசு, நகரங்களின் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.   

     

அந்த வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் - பல்லடம் மற்றும் திருப்பூர் ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக்   குடியிருப்புகளுக்கு ரூ.99.24 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், கரூர் மாவட்டம் - தாந்தோணி ஒன்றியத்தைச் சார்ந்த 274 ஊரகக்   குடியிருப்புகளுக்கு ரூ.81.41 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;  கோயம்பத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி (தெற்கு), பொள்ளாச்சி (வடக்கு) மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களைச் சார்ந்த 212 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.69.31 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

நாமக்கல் மாவட்டம் -  நாமக்கல் நகராட்சிக்கான ரூ.185.24 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்; கிருஷ்ணகிரி மாவட்டம் - கெலமங்கலம் ஒன்றியத்தைச் சார்ந்த   ராயக்கோட்டை மற்றும் 28 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.8.46 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;  

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கான ரூ.30.11 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்;  திருச்சிராப்பள்ளி மாவட்டம் - எஸ்.கண்ணனூர் பேரூராட்சிக்கான ரூ.19.45 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; ஈரோடு மாவட்டம் - பெருந்துறை பேரூராட்சிக்கான ரூ.51.50 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; தஞ்சாவூர் மாவட்டம் - வல்லம் பேரூராட்சிக்கான ரூ.34.51 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி - சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியில் ரூ.35.84 கோடி மதிப்பீட்டிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்தார்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி - சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வ.உ.சி கல்லூரி அருகில் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் மானுடவியல் பூங்கா;  தூத்துக்குடி மாநகராட்சி - தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சி.வ.குளம் முள்ளிக்குளம் மீளவிட்டான்  குளம்; மதுரை மாநகராட்சி - அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் உயர்மட்டப் பாலமாக மாற்றியமைப்பு;  திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கரூர் சாலை, பெஸ்கி காலேஜ் எதிர்புறம் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாநகராட்சி, கரும்புக்கடை தெற்கு மண்டலத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புர சுகாதார மையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் காளப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்; கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள உணவுக்கூடம்; என மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி, திருவள்ளுவர் சாலையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம்; திண்டுக்கல் மாநகராட்சி, கமலா நேரு மருத்துவமனை சாலையில்  ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நகர சமுதாய சுகாதார மையமாக மேம்படுத்தும்  பணி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, நேரு நகரில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில்  அமைக்கப்படவுள்ள நகர்ப்புர வீடற்றவர்களுக்கான கட்டடம்;   கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, காமராஜ் காலனியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, மத்திகிரி பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நவீன எரிவாயு தகன மேடை;  என மொத்தம் ரூ.8 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,  காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு,  நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங்,  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: