சின்னாளபட்டி : குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மேல்நிலை தண்ணீர் தொட்டியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில், குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாராம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, நாச்சகோனான்பட்டி, புளியராஜக்காபட்டி, காலாடிபட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குட்டத்துஆவாரம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சமுதாய கூடம் முன்பு மேல்நிலைதண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை முறையாக பராமரிக்காததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக குடிதண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.