ரேஷனில் பொங்கல் பரிசுப்பொருட்கள் விநியோகம் புகார்களுக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன; கடந்த ஆட்சி காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும், தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையளவில் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன.  இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்க தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர்.  மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விரிவான ஆய்வுக்கு பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை  எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி, நிதித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: