இடையூறு இல்லாமல் சினிமாவில் பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்ல விதிகளை வகுக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. அப்போது, படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குனர் விக்டர் என்பவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார், அவரிடம் இருந்த டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வவதற்குரிய நடைமுறைகளை வகுக்க கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பம் அளித்தும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை போலீசார், டம்மி ஆயுதங்களுக்கு வரிசை எண் பதிவிட்டு உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளனர்.அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: