* மாநகராட்சி அதிரடிசென்னை : தமிழக அரசின் அனுமதியில்லாமல் இயங்கிய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால், ₹15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றும் பொதுமக்களை மிரட்டி வருகிறது. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு சொந்தமான மீன் அருங்காட்சியகம், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லூர் மண்டல அதிகாரிகள், நீலாங்கரை போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தமிழக அரசின் உத்தரவை மீறி மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, மீன் அருங்காட்சியகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால் ₹15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து விஜிபி பொழுதுபோங்கு பூங்கா மீன் அருங்காட்சியக உரிமையாளர் ரவிதாஸ், பிரேம் ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்களது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.