தேனியில் 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி பட்டா மாறுதல் நிலங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு

தேனி: தேனி மாவட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் பலருக்கு அப்போதைய அரசு அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர். இதில் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், விஏஓ, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பான ஆவணங்களை சேகரித்துள்ள சிபிசிஐடி போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி சந்தேகத்திற்குரியவர்களின் பட்டியல் குறித்து சேகரித்துள்ளனர். பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம், பெரியகுளம் தாலுகா அலுவலகம், தாலுகா சர்வேயர் அலுவலகங்கள் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்துள்ள நிலத்தையும் நேற்று நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: