மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சர்வதேச முனையங்களில் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்படி விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள், தங்களது போர்டிங் பாஸ்களை பெறும்போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய “டேக்” என்ற ஸ்டிக்கர்களை, விமான நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் பெற்று, உடமைகளில் தாங்களாகவே ஒட்டி கொள்ளலாம். இதனால் பயணிகள் சோதனை (செக்-இன்) கவுன்டரில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். நேரமும் சேமிக்கப்படும். தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுன்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிர்க்கப்படும். பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்திற்கு அனுப்பும் பயணியரின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.