தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புவழங்குகிறது. இந்த பொங்கல் தொகுப்பினை சமீபத்தில்  முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதியை ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு  என்பதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் தேதியில் பொங்கல் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: