சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து அம்மிணி, வாலிபருடன் கட்டிபுரண்டு சண்டை; கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி, வாலிபர் ஒருவருடன் கட்டிபுரண்டு சண்டை போட்ட விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து இளம்பெண்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதற்கு பாஜ, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து கேரளாவில் பெரும் கலவரம் வெடித்தது. இதனிடையே சபரிமலை சென்ற இளம்பெண்களை பக்தர்கள் வழிமறித்து திரும்பி அனுப்பினர்.

இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி, கனக துர்க்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2 பேருக்கும் கொலை மிரட்டல் வந்தன. இதையடுத்து 2 பேரும் பல மாதமாக தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் பிந்து அம்மிணிக்கு எதிராக சமீபத்தில் 2 முறை தாக்குதல் நடந்தது. கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஒருவர் மிளகு ஸ்பிரே அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த மாதம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டியில் வைத்து இவர் மீது ஆட்டோ மோதி நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்தார். இந்நிலையில் நேற்று கோழிக்கோட்டில் வைத்து மீண்டும் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோழிக்கோடு கடற்கரை அருகே வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இவருக்கும், வாலிபருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் திடீரென மோதிக் கொண்டனர்.

அப்போது ஒருவரையொருவர் கட்டிபுரண்டு சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. வாலிபரின் செல்போனை பிந்து அம்மிணி தரையில் போட்டு உடைத்தார். இந்த சம்பவத்தில் வாலிபரின் வேட்டியையும் உருவினார். வேஷ்டி பறிபோன பின்னரும் வாலிபர் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து பிந்து அம்மிணி கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார். மேலும் அடிதடி காட்சியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. விசாரணையில் அந்த வாலிபர் கோழிக்கோடு, பேப்பூர் சேர்ந்த மோகன்தாஸ், மீனவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து அம்மிணி தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: