பழநி அடிவாரத்தில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்-போலீசார் ஒழுங்குபடுத்த கோரிக்கை

பழநி : பழநி அடிவாரத்தில் சாலையின் நடுவில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். இதனால் பழநி அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக கிரிவீதியில் 1000க்கும் மேற்பட்ட தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக அடிவார பகுதியில் 2 சுற்றுலா பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.

இதனால் பழநி அடிவார பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பூங்கா ரோடு ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. பக்தர்கள் நடந்து செல்வதுகூட சிரமமான சூழ்நிலையாக மாறி உள்ளது. எனவே, பூங்கா ரோடு ரவுண்டானா பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தைப்பூச திருவிழா காலங்களில் மேற்கொள்ளப்படுவதுபோல் பழநி புறநகர் பகுதியில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

பழநி வரும் சுற்றுலா வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: