சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டின் கரையை ஒட்டி 3.6 கி.மீ. உயரத்திற்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.