ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 19ம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள் இடையே நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். எஸ்பி கார்த்திக், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் உள்ளிட்ட அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், சேசுராஜ், சகாயம், எமரிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.