50 கோடி ரூபாய் செலவு செய்தாலும் கூட ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்: அதிமுகவில் கிளைக்கழகத்தை முறையாக கட்டமைக்காவிட்டால், ஒரு இடத்தில் கூட நாம் வெற்றிப்பெற முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக அமைப்புத் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியின் அமைப்புதேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சி.வி சண்முகம்  பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகளை ஒன்றினைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கவேண்டும். நீங்கள் பஞ்சாயத்து பேசி காலநேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களில் புதிதாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இன்னும் நமக்கு சட்டமன்ற தேர்தலுக்கு நாலரை ஆண்டுகளும் எம்பி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளும் உள்ளது. மக்கள் மனதில் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களிப்பார்கள்.

ஆனால் எம்எல்ஏ, எம்பி. தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி நமக்கு தான் வாக்களிப்பார்கள். ஊராட்சி கிளை கழகத்தை வலுப்படுத்தினால் தான் நமது அமைப்பு வலுவான நிலையில் இருக்கும். கிளைக் கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.50 கோடி கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: