சென்னை: உடல்நலக்குறைவால் காலமான கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரண்டாவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சண்முகநாதனின் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1 மணி நேரம் சண்முகநாதன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இன்று மீண்டும் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் சண்முகானந்தனின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.