சேலம்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இன்ஜினியர் தமிழ்ச்செல்வன் (28), அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரான ஓமலூர் நடுப்பட்டியை சேர்ந்த மணி (51), அவரது கூட்டாளியான செம்மாண்டப்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். கூட்டாளியான அதிமுக பிரமுகர் செல்வகுமார், போலீஸ் பிடியில் சிக்காமல் 2 மாதமாக தலைமறைவாக உள்ளார். இதனிடையே, செல்வகுமார் ஓசூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தனிப்படையினர் ஓசூரில் முகாமிட்டு, அங்குள்ள செல்வகுமாரின் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.