சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மண்டபம், புதுக்கோட்டை மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 18ம் தேதி இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மறுநாள் மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்ைக கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரும், 2 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். 68 மீனவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 10 விசைப்படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. 2வது நாளாக நேற்றும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கடலோர மாவட்ட மீனவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் தங்கச்சிமடத்தில் இன்று நடக்கிறது. இந்நிலையில், மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் துணைத்தலைவர் செய்யது சுல்தான் தலைமையில் நேற்று நடந்தது. இதில், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்கள், படகுகளை விடுக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுதல், தங்கச்சிமடத்தில் இன்று நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.