கடலூரில் உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல் அதிமுகவினர் 4 பேர் கைது 13 பேர் மீது வழக்கு

கடலூர்: கடலூர் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் கோஷ்டி மோதல் தொடர்பாக நகர துணை செயலாளர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் இன்றும் நாளையும் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சம்பத் விண்ணப்ப மனுக்களை வழங்கிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் கடலூர் நகர துணை செயலாளர் கந்தன் தரப்புக்கும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி குமார் மற்றும் ஆறுமுகம் தரப்பு இடையே உட்கட்சி தேர்தல் தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருதரப்பையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் நகர துணைச் செயலாளர் கந்தன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இருதரப்பினர் புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கந்தன் புகாரின்பேரில் முன்னாள் கவுன்சிலர் மணி உள்ளிட்ட 4 பேர் மீதும், எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் கந்தன் உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கந்தன் தரப்பைச் சேர்ந்த பிரகாஷ் (39), வடிவேல் (39), மணிகண்டன் (32), மற்றொரு பிரகாஷ் (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: