14 வயது சிறுமி பாலியல் புகார்: பாக். கிரிக்கெட் வீரர் யாஷிர்ஷா மீது வழக்கு

கராச்சி: 14  வயது சிறுமி கொடுத்த பாலியல் பலாத்கார புகாரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான்  டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பரபரப்பு புகார்  அளித்திருக்கிறார். அதில், “யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து வைத்து எனக்கு மிரட்டல் விடுத்து வந்தார். ஃபர்ஹானின் மிரட்டல் குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். மேலும் தனக்கு சின்ன வயசு பிள்ளைகளை மிகவும் பிடிக்கும் என்றார். நடந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எனக்கு பெரிய விஐபிக்களின் தொடர்பு இருக்கிறது. உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும்.

எனவே இதுகுறித்து புகார் தெரிவித்தால் உனது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் யாசிர் ஷாவும், அவரின் நண்பர்  ஃபர்ஹானும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டி வருகிறார்கள். யாசிர் அவரின் நண்பர் செய்த இக்கொடூர செயலை மறைத்து அவருக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை  தொடர்பு கொண்டு உனக்கு ஒரு ஃபிளாட் வீடும், அடுத்த 18 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் பணமும் தருவதாக கூறியதாகவும் சிறுமி புது குண்டையும் வீசி உள்ளார். லெக் ஸ்பின்னரான யாஷிர்ஷா 2014-ல் அறிமுகமாகி 46 டெஸ்ட்களில் 235 விக்கெட்கள் எடுத்துள்ளார். மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 50, 100, 200 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை உள்பட பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. யாசிர் ஷா மீதான பாலியல் புகார் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: